ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் N. சுரேஷ் நந்தா தயாரிப்பில், டைரக்டர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வீராயி மக்கள்’. இப்படம் திரைக்கு விரைவில் வரபோகும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மிக கோலாகலமாக படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் பங்கேற்று கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…
நடிகை தீபா பேசியதாவது,
இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணாக என்னை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் எனக்கு ஒரு மன நிறைவான படமாக அமைந்தது, ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து உருவாக்கி உள்ளார்கள். கிராமத்தில் பேசும் வார்த்தைகளை வசனங்களாக எழுதி தத்ரூபமாக அப்படியே எடுத்துள்ளார் இயக்குநர். இந்த படத்தில் என்னுடன் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் என்னுடன் ஒரு சொந்த உறவுக்காரர்கள் போலவே பழகினார்கள். எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி.
இயக்குநர் கோகுல் பேசியதாவது…,
இயக்குநர் நாகராஜை எனக்கு பல நாட்களாக தெரியும், இந்தப் படத்தை பல வருடங்கள் போராட்டத்துக்கு பின் உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள், என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற மண் சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாகரிகம் கிராமத்தில் தோன்றியது என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை, வெகுளியான மக்களை நாம் அங்குதான் காண முடியும், இப்படிபட்ட ஒரு கதையை படமாக எடுக்க நினைத்த என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும் நன்றி.

இயக்குநர் ராம் சங்கையா பேசியதாவது..,
படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், இந்தப் படத்தின் பெயரைப் பார்த்த உடன் நம் மண்ணின் கதை இது நம் மக்களின் கதை என்ற உணர்வு வந்து விட்டது, தமிழ் சினிமாவின் அடையாளத்தை காண்பிப்பது இது மாதிரியான படங்கள் தான், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இந்த படம் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும் என நம்புகிறேன். இது போன்ற ஒரு படத்தை தேர்வு செய்ததற்கு தயாரிப்பாளருக்கு என் நன்றிகள் என கூறினார்.
நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது,
இந்த மேடையில் எனக்கு நெருக்கமான எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இங்குள்ள அத்தனை நபருடனும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது, இவர்கள் அனைவருமே என்னைப் போல மண்ணை நேசிக்கும் மனிதர்கள், நான் இந்தப் படத்தில் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையாக சொல்ல போனால் இந்த படத்தில் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருத்தமாக அமைந்து விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு எனக்குள் இருந்தது. என் அம்மாவைப் போலவே இந்த வீராயி என் கண் எதிரிலே தோன்றினார்.

இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் நாகராஜ். இப்படிபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இப்படியான ஒரு படத்தை உருவாக்க முடியும், இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். நிச்சயம் இந்தப் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நீண்ட நல்ல எதிர்காலம் இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கண்டிப்பாக பெரிய வெற்றியை ஈட்டுவார், மேலும் இது போன்ற படங்களை தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன். படக்குழு வினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி என்று கூறினார்

ஒளிப்பதிவாளர் சீனிவாசன் பேசியதாவது..,
டைரக்டர் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அவர்தான் கொடுத்தார். எனக்கு தயாரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார், ஷூட்டிங்கில் அனைத்து சூழலிலும் எங்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தார். இந்த படத்தில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது ஒரு புதிய அனுபவத்தை தந்தது. படம் எல்லோருக்கும் பிடிக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள் என பேசினார்.

தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ சுரேஷ் நந்தா பேசியதாவது…,
எனக்கு இதுதான் முதல் மேடை, கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் நாகராஜிற்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ என்பது பெரிய பொறுப்புதான் நான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். எங்கள் அழைப்பை ஏற்று கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, இந்த படம் எல்லோரையும் திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது,
தமிழ் சினிமாவில் இது போன்ற படம் மிக மிக அவசியம். இது போன்ற படங்களை காண்பது அரிதாகி விட்டது. இப்போது வரும் படங்கள் அதிகமாக உறவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அனைத்தும் வணிகமயமாகி விட்டது, இந்தச் சூழலில் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு பெரிய படங்கள் தான் பிடிக்கும் என்பது இல்லை, மக்கள் அதை பல முறை பொய்யாக்கி விட்டனர். மக்கள் நல்ல படத்திற்கு கண்டிப்பாக ஆதரவு அளிப்பார்கள். மக்களுக்கு தேவையான சினிமா இது, மக்களும் இதை புரிந்து கொண்டு, இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும். மறுபடியும் இதன் வெற்றி விழாவில் சந்திப்போம் நன்றி என்று கூறினார்.
நடிகர் ரவி மரியா பேசியதாவது,
இந்தப் படத்தில் ஒவ்வொரு சீன்களும் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், இந்தப் படத்தில் பல இயக்குநர்கள் இணைந்து நடித்துள்ளோம். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படங்களின் பட்டியலில் இந்தப் படம் முதலில் இருக்கும். இந்தப் படம் பல குடும்பங்களை இணைக்க போகிறது என்பது உறுதி. இந்தப் படம் இயக்குநரின் ஒரு 25 ஆண்டு போராட்டம், பல வலிகளை சுமந்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார். கண்டிப்பாக அவரின் உழைப்பு வீண் போகாது. இந்தப் படம் மக்கள் மனதைக் கண்டிப்பாக கவரும். படத்தில் பணி செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

இயக்குநர் நாகராஜ் பேசியதாவது…,
எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, உங்கள் மத்தியில் எங்களது படைப்பை அறிமுகப்படுத்தியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோபம், வாழ்க்கை, வாழ்வியல், இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு முதல் படம் முடித்த பிறகு 7 வருடங்களுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய நண்பர்கள் தான் என்னை நகர்த்தி சென்றனர். அவர்களில் சில நண்பர்கள் இங்கு வந்துள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாருக்கும் நன்றி, சுசீந்திரன் சாருடன் பணி செய்தது ஒரு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது.

இந்தப் படத்தை நான் எழுதி முடித்த உடன், நான் முதன் முதலாக தேர்வு செய்தது வேல ராமமூர்த்தி அய்யாவை தான், அவர்தான் வேண்டுமென்று நினைத்தேன், அவரும் ஒத்து கொண்டார். இந்தப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமானதாக இருக்கும், கண்டிப்பாக உங்களுக்கும் புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக அமைய வேண்டுமென்று நினைத்தேன். அதே போல எல்லாம் அமைந்தது விட்டது. இந்தச் சூழலில் நான் மாரிமுத்து ஐயாவை நினைத்துப் பார்க்கிறேன், அவரது முயற்சி இந்த படத்திற்கு பெரிய பயனாக இருந்தது.

இந்தப் படம் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் மகிழ்ச்சியை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் அமைந்து இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இப்படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்களுடைய ஆழ் மனதை தொடும் என்று நம்புகிறேன். என்னுடன் பணி ஆற்றிய அனைவருக்கும் நன்றி என கூறினார்
இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, செந்தி குமாரி, ரமா, பாண்டி அக்கா மற்றும் ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்
N. சுரேஷ் நந்தா தயாரிப்பில், இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார். M. சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்து இருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here