இன்றைய காலகட்டத்தில் நடிப்பில் ஆர்வம் இருப்பவர்கள் சோசியல் மீடியா மூலம் தங்களது தனித்திறமையை வெளிக்காட்டி சினிமா வாய்ப்புகளை பெறுகின்றனர் என நடிகர் மதுரை பால சரவணன் கூறியுள்ளார்.
“பெருசு” திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் “பெருசு” (Perusu) திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் இப்படத்தில் நடித்த நடிகர் பால சரவணன் நேற்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதற்காக வருகை தந்தார்.
படத்தை பார்த்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நான் நடித்துள்ள 7 படங்கள் ரிலீசுக்காக தயார் நிலையில் உள்ளது. இன்னும் 7 படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, திருச்சிக்கு ‘மாமன்’ படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். ‘விலங்கு’ வெப்சீரீஸ் இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டிய ராஜன் மாமன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரன் மற்றும் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். மேலும் நடிகை நயன்தாரா உடன் “மண்ணாங்கட்டி” திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்த திரைப்படம் வரும் வாரங்களில் வெளியாக உள்ளது. திரைத்துறையில் தொடர்ந்து நம்முடைய உழைப்பைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பட வாய்ப்பு:-
நாங்கள் வாய்ப்புத் தேடும் போது பல்வேறு அலுவலகங்களுக்கு ஏறி, இறங்கி புகைப்படங்களை கொடுத்து வாய்ப்பு தேடினோம். ஆனால், தற்போது அப்படியில்லை. எளிதாக இன்ஸ்டாகிராம், யூடியூப் வீடியோக்களை போட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னிடம் தனித்திறமை உள்ளது என சொந்த முயற்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள்.
குவியும் வாய்ப்புகள்:-
என்னைச் சரியான இடத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என அவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் வீடியோ மூலம் காண்பித்து வாய்ப்புகள் பெற்று பலர் வெற்றி அடைந்துள்ளனர். பெருசு திரைப்படம் ஆரம்பிக்கும் போது, இந்த படத்திற்குத் தலைப்பு வைக்கவில்லை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது தான் இந்த படத்தின் தலைப்பை இயக்குநர் கூறினார். இதைவிட பொருத்தமான தலைப்பு இந்த படத்திற்கு இருக்க முடியாது,” எனத் தெரிவித்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here