அரவிந்த்சாமி வந்து நின்றாலே கம்பீரம்.. ஆளுமை இயக்குனர் ச.பிரேம்குமார்
மதம் – சித்தாந்தம் : இதன் ஒவ்வொரு உணர்வுக்கும் அடிப்படையான அன்பினை பற்றி அதிகம் பேசக்கூடிய படம். இந்த உலகில் வெறுப்பு என்பது பழகி போன ஒன்றாகி விட்டது. மிதமான அன்பையும் அழுத்தி சொல்லியாக வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். அன்பாக இருப்பவர் பிழைக்கத் தெரியாத ஆள் என்கிறார்கள்..! அனைத்து உணர்ச்சிகளுக்கும் தாயுணர்வு அன்பு மட்டும் தான். அன்பாக இருப்பது எவ்வளவு அழகான விஷயம் என்பதை சொல்றதுதான் இந்த மெய்யழகன்.
என்னை பாதித்த விஷயம் தான் இந்த ஸ்கிரிப்ட் : நான் இதை ஒரு வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். வாழ்க்கை தான், நாம் யோசிக்கவே முடியாத சினிமா. இலக்கியம் மற்றும் சினிமாவும் தான் மனிதனை அன்பால் தொடுகிறது. சினிமாவின் மொழி எப்பொழுதும் எளிமையானது. இன்னும் நம் கண்ணுக்கு கட்டுப்படாத கரிசனங்களின், பிரியங்களின் குவியல்தான் இந்த மெய்யழகன்.
இங்கே வீரமும் காதலும் இருக்கத்தான் செய்கிறது, நாம் அன்பு என்பது இல்லாமல் போகும் காலகட்டத்தில் இருக்கோம். ஆனால் அன்பே உருவாக இருக்கக்கூடிய நபர்களும் இருக்காங்க. உங்களுக்காகவும் எனக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவர்களால் முடிந்த அன்பை காட்டுவதால் தான் இந்த உலகம் இன்னும் உயர்ந்து இருக்கு. சிலரால் அன்பு கட்டாமல் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. அப்படி அனைவராலும் இருக்க முடிந்தால் இங்கே குழப்பங்களும் குற்றங்களும் அன்பால் குறையும்.

என்னுடைய ‘96’ படம் காதல் படம் கிடையாது. அந்த படமும் அன்பை போதிப்பது தான். அதில் ரொமான்ஸ் இல்லை. அன்பின் முதல் புள்ளியாக 96ஐ வைத்துக் கொண்டால் ‘மெய்யழகன்’ 2ஆவது புள்ளி. மக்கள் எல்லோரும் வெறுப்புக்கு பழகிட்டாங்க. எல்லோரையும் சேர்த்து தான் சொல்றேன். அன்பை நயமாக கலைநயமாக நுண்ணறிவோட சொல்ல முடிந்தால் நல்லது என்று நினைச்சேன். நாமளும் அன்பை விதைக்கிறதுக்கு உண்டான முயற்சி தான் என் முதல் வேலை. மற்றது எல்லாம் அப்புறம்தான். அப்படி ஒரு நல்ல முயற்சியாகத்தான் மெய்யழகன் இருக்கும்.

கொரோனா சமயத்தில் 3 கதை எழுதி வைச்சிருந்தேன். அதோடு ஒரு சிறுகதையும் எழுதினேன். அதை படித்த டைரக்டர்கள் நண்பர்கள் சிலர், கதை நல்லா இருக்கு என்று சொல்ல அதையே நாவலாக எழுதுவதற்கு உட்கார்ந்தேன். இதில் ஒரு பகுதி தான் 96. நாவலாக வெளியிடுவதற்கு முன்னால் ஒரு தடவை விஜய் சேதுபதியிடம் படிக்க கொடுத்தேன். விஜய்சேதுபதி படிச்சிட்டு கொண்டாட தொடங்கிட்டார்.
சபையாக கூடி அனைவரிடமும் படித்து காட்டி கண்கலங்கி கட்டிப்பிடித்து கொஞ்சினார். என்னோட எழுத்து அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்தான் என்னை இயக்குனர் ஆக்கினார். பிறகு புத்தகமாக போடலாம் முதலில் படமாக பண்ணுங்க என்று கூறினார். 96 படப்பிடிப்பின் போது, இந்தக் கதையை நான் செய்யலைனா வேறு யார் செய்லாம்னு சேதுபதி கேட்டார். நான் சொன்ன ஒரே ஒரு பெயர் கார்த்தி. எனது இந்த நாவலை படித்த பிறகு எப்படிங்க இப்படி ஒரு கதையை எழுதினீங்க என்று கேட்டார், கார்த்தி. எனக்கு பெருமூச்சு வந்தது. பிறகு சூர்யா சாரை பார்த்ததும் 2D மூலமாகவே ‘மெய்யழகன்’ தொடக்கமானது.

தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் நடக்கும் கதை. 2 பேருக்கு இடையில் நடக்க கூடிய உரையாடல் மனமாற்றம் தான் படம். படத்தில் முக்கியமாக 2 கேரக்டர்கள். கார்த்தி, அரவிந்த்சாமி. கார்த்தி மனதில் இந்தக் கதை நல்லபடியாக இறங்கி இருக்கிறது. அவருக்கு அன்பே உருவான கதாபாத்திரம். அவரால் கோபத்தையும் அன்பால்தான் காட்ட முடியும். அதேபோல வருத்தத்தையும் அன்பு கலந்து தான் சொல்ல முடியும். இதில் வெறுப்புக்கு இடமே இருக்காது. சில பேர் குழந்தைத்தனம் மாறாமல் பரிசுத்தமாக இருப்பாங்க. ஒரு சீனை படித்து விட்டு நன்றாக நடிப்பது வேறு. அதன் சாரத்தையும் பிடித்து விட்டால் வேறு எதுவும் பண்ண தேவையில்லை.
அரவிந்த்சாமி வந்து நின்றாலே கம்பீரம் ஆளுமை வேணும் என்கிற மாதிரி ஒரு இடத்தில் வரணும். ரொம்பவும் பேசாத வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தை சந்தித்துவிட்டு அதில் இருந்து மீள முடியாமல் அமைதியானவர். உள்ளுக்குள்ளே பெரிய அன்பிருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தனக்குள்ளே தன்னை அடக்கிக் கொண்ட ரோல். யாரையும் அதிகம் நம்பாமல் நம்மையே நாம் பார்த்துக்க வேணும்னு நினைக்கிறவர் அரவிந்த்சாமி. ஒரு இழப்பின் விளைவாக இப்படி மாறியிருப்பார். அவர் அழகு, நிறம், ஆளுமை மட்டுமில்லை அவரிடம் பேராண்மையும் சேர்ந்திருக்கும். அது அவருக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கும். குடும்பத்தில் ஒரு மூத்த அண்ணன் மாதிரி இருந்தார்.

ராஜ்கிரண், அரவிந்த்சாமியின் தாய் மாமன். கார்த்திக்கு பெரிய அப்பா. ரொம்ப சென்டிமென்ட் கேரக்டர். அவரோடு காமெடியான கேரக்டரும் இணைஞ்சிருக்கு. தேவதர்ஷினி அரவிந்த்சாமியோட ஜோடி. அவங்களோட பெஸ்ட் கேரக்டர் இது. கிட்டத்தட்ட ஒரு கதைநாயகியின் இடம் இருக்கு. கார்த்திக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா. வெள்ளந்தியான கணவனை விட்டு கொடுக்காமல் அவனை அப்படியே ஏத்துக்கொள்ளும் மனைவி. கருணாகரன் ஒரே ஒரு காட்சியில் கண்டக்டர் கேரக்டரில் வருவார். கதையின் திருப்பமே அங்கேயிருந்து தான் தொடங்கும். J.P.பி சார் அரவிந்த்சாமியோட அப்பாவாக நடிச்சிருக்கார்.
மேலும், சுவாதி கொண்டே, ஶ்ரீரஞ்சனி, இளவரசு, சரண், ராஜ்குமார், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராணி சம்யுக்தா, இந்துமதி, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கேமரா மகேந்திரன் ஜெயராஜூ : படத்தின் இன்னும் அசல் முகம் வேண்டி லைவ் சவுண்ட்தான் படத்தில் பயன்படுத்தியிருக்கோம்.
கோவிந்த வசந்தாவின் இசை இதில் ஊர் விருந்து மாதிரியிருக்கும். அப்படியே மனதை தட்டி தூக்கிட்டார். கதை சூழல் தெரியாமல் கேட்டவங்களும் அழுதாங்க. எல்லோரது கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.
‘மெய்யழகன்’ – உங்கள் சொந்த ஊரை நினைவு படுத்துவான். நாம் பேச வேண்டாம் என்று நினைச்சவங்களிடம் மன்னிப்பு கேட்க தோன்றும். படத்த பார்த்துவிட்டு உங்ககிட்டே இருக்கும் அன்பு வெளிப்படும்.

தயாரிப்பு | 2D entertainment |
தயாரிப்பாளர் | ஜோதிகா மற்றும் சூர்யா |
இணை தயாரிப்பு | ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் |
ஒளிப்பதிவு | மகேந்திரன் ஜெயராஜு |
எடிட்டிங் | R.கோவிந்தராஜ் |
புரொடக்ஷன் டிசைனர் | ராஜீவன் |
ஆர்ட் | ஐயப்பன் |
பாடல்கள் | கார்த்திக் நேத்தா – உமாதேவி |
வெளியீடு | செப்டம்பர் 27 |
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here