வாழை படத்தின் வெற்றியால்: தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உற்சாகம் 

0
102

‘வாழை’ படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று தயாரிப்பாளரும், இயக்குநருமான,  ஜே.எஸ்.கே அவர்கள் கூறியுள்ளார்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற ‘வாழை’ திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வருபவர் ஜே.எஸ்.கே.

நன்றிகள் :-

இது குறித்து பேசிய அவர், “இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் ‘வாழை’ படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 

இந்த திரைப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் தங்களது விமர்சனங்களில் எனது நடிப்பை பற்றி குறிப்பிட்டு பாராட்டி இருந்தனர். அவர்களின் ஊக்கத்திற்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். திரையுலகில் எனது ஆரம்ப காலம் முதல் உறுதுணையாக இருந்து வரும் பத்திரிகையாளர்கள் தற்போது என்னுடைய நடிப்பு பயணத்திலும் ஆதரவாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. பெரும் ஆதரவளித்துள்ள ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

தேசிய விருது உறுதி:-

‘வாழை’ படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், பொன்வேல், ராகுல், அம்மாவாக நடித்த ஜானகி, புரோக்கராக நடித்த பத்மன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். பொன்வேலுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி என்று நம்புகிறேன். படத்தின் பக்கபலமாக இருந்த ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அவர்களுக்கும், சிறப்பான இசையை வழங்கிய சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள், குறிப்பாக உதவி, துணை இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள். 

சிறந்த படைப்புகளுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்று கூற்றுக்கு உதாரணமாக ‘வாழை’ திரைப்படத்தின் வெற்றி அமைந்துள்ளது. சமூக பொறுப்புள்ள படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மாரி செல்வராஜ் அவர்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். மாற்று சினிமாவை நோக்கி தமிழ் திரை உலகம் முன்னேறி வரும் சூழலில் இனிவரும் இளம் இயக்குநர்களும் பொறுப்புள்ள படங்களை இயக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 

இயக்குநர் ராமால் அறிமுகம் :-

தேசிய விருது பெற்ற வெற்றி படங்களை தயாரித்திருந்தாலும் நடிகனாக என்னை ‘தரமணி’ படத்தில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் ராம் அவர்கள். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ திரைப்படத்திலும் நடித்திருப்பது பெருமை.

தொடர்ந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல மாற்று சினிமாக்களுக்கான காலம் தமிழ் திரையுல‌கில் கனிந்துள்ள நிலையில் இத்தகைய முயற்சிகளை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நான் உளமார நம்புகிறேன்,” என்று ஜே.எஸ்.கே கூறினார். 

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here